அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆறு பேர், முறையான தேர்வு நடைமுறைகளை எதிர்கொள்ளாமல், சட்டவிரோதமாக நியமனம் பெற்று பணியில் நீடிப்பதாக கூறி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நந்தனம் கல்லூரிகள் அறக்கட்டளை நிர்வாகி மோகன் கிருஷ்ணா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையும், அமலாக்கப்பிரிவும் 2018ம் ஆண்டே வழக்குப்பதிவு செய்துள்ள போதும், இதுவரை அந்த ஆறு உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதுநாள் வரை அவர்கள் ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆறு உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பதை தடுக்க வேண்டும் எனவும், முறைகேடாக நியமனம் பெற்ற ஆறு உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி தண்டிப்பதுடன், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இரு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

You may also like...