கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாங்குளம் நீர்நிலை மீதான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த செங்கோடவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்களம் கிராமத்தில் அமைந்துள்ள பாங்குளம் குளத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறியுள்ளார்.
அந்த நீர்நிலையை ஆக்கிரமித்து அதில் வீடுகள் கட்டுயுள்ளதால் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அளித்ததாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி வாதிட்டார்.
இதனையடுத்து, மனுவை பரிசீலித்து 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.