தனியார் பள்ளி நடத்தி ஷேர் வசூலித்து மோசடி செய்தவர்களுக்கு முன் ஜாமீன் தர கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஷேர் பெற்று ரூ.12 கோடி மோசடி செய்ததாக தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பள்ளி தலைவர் முனிரத்தினம் உள்பட 15 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 15 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் சித்ரா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் மீதம் உள்ள 12 பேரின் முன் ஜாமீன் மனு நீதிபதி தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த பார்த்தசாரதி உள்பட 10 பேர் சார்பாக வக்கீல் ஹரிகர அருண் சோமசங்கர் ஆஜராகி, ஷேர் மோசடி செய்த 12பேருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது. அவர்கள் ஏற்கனவே எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அவர்கள் பலரிடம் ஷேர் பெற்று சுமார் ரூ.15 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். எனவே அவர்களுக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். மனுதாரர் சார்பாக வக்கீல் சிவக்குமார் ஆஜராகி, 12பேருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.