தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, தமிழக அரசுக்கு இரு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், கடந்த விசாரணையின் போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐ.எப்.எஸ்) அதிகாரிகள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்யச் சென்ற குழு அறிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம், சீமை கருவேல மரங்கள், இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தப்படுவதாகவும், இரண்டு மூன்று ஆண்டுகள் அப்பகுதியை கண்காணித்து, மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்வதாகவும், சீமை கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடங்களில் நாட்டு மரங்கள் நடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

இதே நடைமுறையை பின்பற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகள் குழு அளித்த அறிக்கைகள், அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் விரைந்து கொள்கை முடிவெடுக்கும் எனவும் அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதற்கிடையில், ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது பொதுப்பணித் துறையின் பணியை தடுக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுப்பணித் துறை மரங்களை அப்புறப்படுத்தவதை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கையும் இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...