தேர்தலின் போது சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 1975ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர், வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 உட்பிரிவு 3ல், மத சின்னங்களை பயன்படுத்துவது ஊழல் நடவடிக்கை எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1975ம் ஆண்டு இந்த சட்டப்பிரிவில், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னங்களை மத சின்னங்களாகவோ, தேசிய சின்னங்களாகவோ கருதக் கூடாது என திருத்தம் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்திருக்கிறார்.
இது அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் இந்த சட்டத் திருத்தத்தை சட்டவிரோதமானது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.