நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால

பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான 8 போக்சோ வழக்குகளில் சாட்சி விசாரணை பதிவை மட்டும் மேற்கொள்ள தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்–லைன் வகுப்பில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அசோக்நகர் போலீசார், 8 போக்சோ வழக்குகளைப் பதிவு செய்தனர்.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த 8 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கக்கூடாது என்றும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் ராஜகோபாலன் தாக்கல் செய்த மனுவை, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ராஜகோபாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், 8 வழக்குகளில் 5 வழக்குகள், ஐந்து ஆண்டுகள் தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போக்சோ சட்டப்பிரிவு 12ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனையே 3 ஆண்டுகள் தான். அதனால், இந்த 8 வழக்குகளையும் தனித்தனி வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் வழக்கை தனித்தனியாக பிரித்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் மீதான 8 வழக்குகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் எப்போது புகார் அளிததனர்? குற்றச்சம்பவம் நடந்தது எப்போது? வழக்குப்பதிவு செய்தது எப்போது? என்பது உள்ளிட்ட விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்டு 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.,

அதுவரை, ராஜகோபாலனுக்கு எதிரான வழக்குகளில் சாட்சி பதிவை மட்டும் மேற்கொள்ள தடை விதித்தும் நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...