நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் நிலமாக மாற்றுவதை

நீர்ப்பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக நத்தம் நிலமாக மாற்றுவதை எதிர்த்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திக் நாதன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மிட்டா மண்டகப்பட்டு கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் நிலம் நீர் பிடிப்பு பகுதியாகவும், தண்ணீர் இல்லாத நாட்களில் களத்து மேடாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேகரிக்கும் நீர் பிடிப்பு பகுதியை இருளர் இன மக்களுக்கான வீட்டு மனைகளுக்கு இலவசமாக பட்டா போட்டு கொடுப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீர் ஆதாரத்தையும், இருளர் இன மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசின் முடிவை சீராய்வு செய்ய வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் மார்ச் 7ஆம் தேதி மனு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

களம் என வகைப்படுத்தப்பட்ட் நிலத்தை, இலவச வீட்டு மனை பட்டா திட்டத்திற்காக நத்தம் நிலம் என மாற்றக்கூடாது என மிட்டா மண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவருக்கு உத்தரவிடவும், இருளர் இன மக்களுகான வேறு இடத்தை கண்டறியவும் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரி, மிட்டா மாண்டகப்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

You may also like...