முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு என்ற ஒரே காரணத்துக்காக மறு ஆய்வு செய்யாமல், மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறு ஆய்வு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

முந்தைய அரசு எடுத்த கொள்கை முடிவு என்ற ஒரே காரணத்துக்காக மறு ஆய்வு செய்யாமல், மக்களுக்கு நன்மை தராத திட்டங்களை மட்டும் மறு ஆய்வு செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

மேலும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் மதுபானத்தை அரசே விற்கும் கொள்கை முடிவில் மட்டும் அடுத்தடுத்து வரும் அரசுகள் ஒத்துப்போவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் மதிப்பீட்டில் அமைக்க அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு முடிவெடுத்து, கூட்டுறவுத்துறை அரசாணையும் பிறப்பித்து, கட்டுமான பணிகளும் தொடங்கப்பட்டன.

பின்னர் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நடந்த ஆய்வு கூட்டத்தில், ஏற்காட்டில் மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிறுவனம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என ஆகஸ்ட் மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே நடைபெற்று வந்த ஏற்காடு பயிற்சி நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும், அரசாணையையும் ரத்து செய்யக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு (லேம்ப் – LAMP) கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அதில், ஏற்காட்டில் அமைய இருந்த பயிற்சி மையத்தை கொடைக்கானலுக்கு மாற்றுவது துறை ரிதியான முடிவு இல்லை என்றும், முதல்வர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதை அரசின் கொள்கை முடிவாகத்தான் கருத முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை மாநில அளவிலான மையம் அமைக்க வேண்டுமா அல்லது தேசிய அளவிலான மையம் அமைக்க வேண்டுமா என்பது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது என்பதால், இதில் எந்த முடிவு சரியானது என நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியாது என்றும், அந்த கொள்கை முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டதாக கருதினால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே மாநில அளவிலான இரண்டு மையங்கள் உள்ள நிலையில், எவ்வித விவாதங்களும் நடத்தப்படாமல் மேலும் ஒரு மாநில அளவிலான மையத்தை அமைக்க அவசியம் இல்லை என பின்னர் வந்த அரசு எடுத்த முடிவில் தவறு இருப்பதாக காணமுடியாது என உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் கொள்கை முடிவுகளை பொறுத்தவரை நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கும் வரை அவற்றை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும், ஏற்காட்டில் மாநில அளவிலான மையத்தை கைவிடும் முடிவும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விசயம் இல்லை என்பதாலும் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது என கூறி சென்றாயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவை எடுத்து அதில் நடவடிக்கையை தொடங்கிய நிலையில், அடுத்து வரக்கூடிய அரசு, முந்தைய அரசின் கொள்கை முடிவை மறு ஆய்வு செய்ய்யலாம் என்றும், ஆனால் அவ்வாறு செய்யும்போது முந்தைய அரசின் முடிவு, செலவு செய்த தொகை வீணாவதை தவிர்க்கலாம் என்றும், மாற்றுவழியில் மக்களுக்கு பயன்படுத்தலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

2006லிருந்து 2011ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்த அரசு 1100 கோடி ரூபாய் செலவில் சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்ட நிலையில், 2011ல் பொறுப்பேற்ற புதிய அரசு ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியதை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் கொள்கையில் தலையிட முடியாது என கூறி, புதிய அரசின் முடிவை மாற்ற முடியாது என உத்தரவிட்டதை குறிப்பிட்டுள்ளார்.

சில துறைகளை பொறுத்தவரை முந்தைய அரசு எடுத்த முடிவு மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் முடிவாக இருந்தாலும் கூட அவற்றை கைவிடாமல் அடுத்தடுத்து வரும் அரசுகள் அந்த கொள்கை முடிவகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் டாஸ்மாக் மதுபான கடைகளை அரசே நடத்தும் என்ற முந்தைய அரசின் கொள்கை முடிவை மட்டும், மாநில அரசின் வருவாய்க்காக அடுத்தடுத்து வந்த அரசுகள் பின்பற்றிவருவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய அரசு மக்கள் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் ஒரு திட்டத்தை தொடங்கிவிட்டால், பின்வரும் அரசு அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஒரு திட்டத்தில் பெருந்தொகை செலவு செய்யப்பட்டிருந்தால், அவ்வாறு செலவிட்ட தொகை அரசின் கொள்கை மாற்றத்தால் வீணாகாமல் இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

வேறொரு கட்சி தலைமையில் அரசு இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக, பின்னர் பொறுப்பேற்கும் மற்றொரு கட்சி தலைமையிலான அரசு, எல்லா முடிவுகளையும் மறு ஆய்வு செய்ய அவசியம் இல்லை என்றும், ஒருவேளை மக்களுக்கும் சமுதாயத்திற்கு பயன்தராத வகையில் இருந்தால் அதை மறு ஆய்வு செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

You may also like...