SEKAR REPORTER

வடலூர் வள்ளலாளர் case நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு சரமாரி கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

வடலூர் வள்ளலார் சத்யஞான பெருவெளிச் சபையை சுற்றி அமைந்துள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன் அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (மே 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வடலூரில் எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என தனது திருமுறைகளில் வள்ளலார் தெரிவித்துள்ளார். அதனால் எந்த கட்டுமானங்களையும் மேற் கொள்ள கூடாது. அரசின் சர்வதேச மையம் சத்யஞான சபையின் அருகில் கட்டப்படுவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

அரசு தரப்பில், சத்யஞான சபைக்கு அருகில் சர்வதேச மையம் அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாத போது, ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 2021ல் அறங்காவலர்களை நியமிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. 36 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற கோவில்களில் நியமிக்க அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வள்ளலார் தனது பாடல்களில் பெருவெளி மையம் அமைக்க கூடாது என குறிப்பிடவில்லை. வள்ளலாரின் பாடல் அர்த்தங்கள் தவறான பொருள்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. வேதங்களை அவர் எதிர்க்கவில்லை. வேதங்களை திருத்தி கூறுபவர்களையே வள்ளலார் எதிர்த்தார்.

அதனால், பாடல்களை தவறாக படித்து தவறான பொருள்களை பரப்பி வள்ளலாரின் புகழை கெடுக்க வேண்டாம். அரசு அமைக்கும் மையத்தால் சத்யஞான சபைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும் போது தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன?

வள்ளலார் கூறிய பெருவெளியில் தற்போது 7.1 ஏக்கர் நிலம் மட்டுமே பாக்கி உள்ளது. சத்யஞான சபையை சுற்றி சுமார் 400 கடைகள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளன. பின்னர் எப்படி வள்ளலாரின் பெருவெளி நிலம் பெருவெளியாகவே உள்ளது என கூற முடியும்.

பெருவெளியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிடப்படும். பெருவெளியில் இருக்கும் 400 ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்த வேண்டும். வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

கோவில்களில் வி.ஐ.பி தரிசனம் தடுக்கப்பட வேண்டும். கடவுள் முன் அனைவரும் சமம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். சத்யஞான சபை செயல்பட்டு வந்த 106 ஏக்கர் நிலத்தில் தற்போது 71 ஏக்கர் மட்டுமே உள்ளது. 12 கிணறுகள் அழிக்கப்பட்டுள்ளன. 1939ம் ஆண்டு அறநிலையத்துறை விதிகளுக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. 1 லட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது என கண்டனம் தெரிவித்தனர்.

அரசு தரப்பில், ஆக்கிரமிப்புகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை. அறநிலையத்துறை அதன் கடமையை செய்தாலே போதும். சர்வதேச மையம் அமைக்க யார் அனுமதி வழங்கியது. அதற்கான அனுமதி கடிதத்தை சமர்பிக்க வேண்டும். அரசு கட்டிடம் என்றால் அனுமதி வாங்க கூடாதா?

அறங்காவலர் நியமனம் தொடர்பாக ஜூன் 10ம் தேதி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version