திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமித்துள்ளது குறித்து தமிழக நில நிர்வாக ஆணையர் பொதுப்பணித்துறை செயலாளர் அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தக் குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறையிடம் விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
இதையடுத்து, குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நில நிர்வாக துறை ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறினால் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.