சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிரான அவதூறு வழக்கில், ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் பாபு முருகவேல் தரப்புக்கு எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான ஆவண ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தது.