லஞ்சம் கொடுத்து bank கியில் கடன் வாங்கியதாக வழக்கில்
அதிமுக முன்னாள் எம்பி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2014-2019ம் ஆண்டுகளில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி அதிமுக எம்பியாக இருந்த கே.என்.ராமச்சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார்.
அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணமாக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2015ம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. – எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது, இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. .
அதில், அதிமுக முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும்,
தலா 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
விமான செலவை லஞ்சமாக பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
20 கோடி ரூபாய் கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
முன்னாள் எம்பி ராமச்சந்திரன் சார்பில் வக்கீல் எம்.எப்.சபானா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “லண்டனில் உள்ள மெர்லின் சொகுசு குடியிருப்பில் வங்கி அதிகாரி தங்கினார். இதற்கு பெருந்தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை . தூதரம் மூலம் சிபிஐ அதிகாரிகள் விவரம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கும் சரியான பதிலும் லண்டன் குடியிருப்பில் இருந்து வரவில்லை.எனவே அதிமுக முன்னாள் எம் பி., ராமச்சந்திரன், வங்கி அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நம்பும் படியாகவும், ஏற்கும் படியாகவும் இல்லை. அதனால் இவர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்டனையை அபராதத்தையும் ரத்து செய்கிறேன் இவர்கள் யாராவது சிறையில் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செலுத்திய அபராத தொகையை உடனே திருப்பி கொடுக்க வேண்டும்”என்று தீர்ப்பளித்துள்ளார்
.