இளம் வழக்கறிஞர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாகவும், அடுத்த தலைமுறையினர் சரியில்லை எனக் கூறுவதில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், பிரிவு உபச்சார விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபுர்வாலா, இன்று பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “மே மாதத்தில் பிறந்து மே மாதம் ஓய்வு பெறுகிறார். ராஜராஜ சோழன் போல வந்து தலைமை நீதிபதியாக பதவியேற்றார். ராஜராஜ சோழன் ராஜ்ஜியங்களை வெற்றி கண்டார். ஆனால் தலைமை நீதிபதி நம் மனதை வெற்றி கொண்டுள்ளார்.
பொது நல வழக்குகள் குறித்த உங்கள் அக்கறை மகத்தானது. அதற்கென தனி பட்டியலையே(cause list) கொண்டுவந்தவர் நீங்கள். ஆன்லைன் கேம் தடை, நீர் நிலை பாதுகாப்பு, நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வழக்குகளில் உங்கள் தீர்ப்புகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை
நீதிபதியாக பணியாற்றிய 14 ஆண்டுகள் இரண்டு மாத காலத்தில் நீங்கள் வெறும் ஏழு நாட்கள் மட்டும் தான் நீதிமன்றத்திற்கு விடுப்பு எடுத்து உள்ளீர்கள். பல நாட்கள் நீதிமன்ற நேரத்தைக் கடந்தும் வழக்குகளை விசாரித்துள்ளீர்கள். அதற்கு உங்கள் விளையாட்டும், உடல் ஆரோக்கியம் மீதான அக்கறையுமே காரணம்.
சென்னைக்கு வருவதற்கு முன்பாக நீங்கள் 85,090 வழக்குகளில் தீர்ப்பளித்தது உள்ளீர்கள். உங்களின் நானூறுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் பல்வேறு சட்ட இதழ்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
சென்னைக்கு வந்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் 13,050 வழக்குகளையும், உயர்நீதிமன்ற மதுறைக்கிளையில் 1,574 வழக்குகளையும் முடித்துள்ளீர்கள்.
மொத்தம் 14 ஆயிரத்து 859 வழக்குகள். ஒட்டுமொத்தமாக பார்த்தால்
99,949 வழக்குகளில் நீங்கள் தீர்ப்பளித்ததுள்ளீர்கள். இது மிகவும் அசாத்தியமான ஒன்று.
ஐ.பி.எல் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கு முன்பாக விராட் கோலி சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. வெற்றி வாய்ப்பு ஒரு சதவீதம் இருந்தால் கூட அதை 10% ஆக மாற்ற முயற்சிப்பேன். 10 சதவீதத்திலிருந்து முப்பது. முப்பதிலிருந்து நூறு சதவீதத்தை எட்டி எனது இலக்கை அடைவேன் என்றார். அதேபோலத்தான் நீங்களும் நீதித்துறையில் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளீர்கள்” என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற போது தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்த கங்காபுர்வாலா தனது பிரிவு உபச்சார விழா உரையை மாலை வணக்கம் என தமிழில் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 20 ஆண்டுகளாக நான் பல்வேறு சட்டக் கல்லூரிகளில் விரிவுரை ஆற்றி வருகிறேன். அதில் பலர் தற்போது வழக்கறிஞர்களாக உள்ளனர். பலர் மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர். இரண்டு பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். எனது அடுத்த தலைமுறையினரை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் பணியாற்றிய காலத்தில் பல நீதிபதிகள் தங்களது கருத்துக்களால் என்னை செறிவூட்டி உள்ளனர்.
நீதிபதி லோயாவுடன் பணியாற்றும்போது, இரவு இரண்டு மணி வரை வழக்கறிஞர்கள் நாங்கள் பணியாற்றினோம். அந்த கடின உழைப்பைத்தான் நீதிபதியாக எனது பணிக்காலத்திலும் நான் பின்பற்றியுள்ளேன்.
நான் சென்னைக்கு வரும்போது என்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று யோசித்தேன். ஆனால் நீதிபதி ஆனந்த் வைத்தியநாதன் ,ஆர் மகாதேவன் ஆகியோர் என்னை சென்னை விமான நிலையத்திற்கே வந்து அன்புடன் வரவேற்றனர். உங்கள் அன்பு தான் இங்கு இருப்பதை சொந்த ஊரில் இருப்பதைப் போல என்னை உணரச் செய்தது.
தனது சார்பியல் கோட்பாடு குறித்து ஐன்ஸ்டீன் விளக்கும்போது, நீங்கள் ஒரு வெந்நீரில் உங்கள் விரலை வைத்தால் ஒரு நிமிடம் உங்களுக்கு ஒரு மணி நேரமாக தோன்றும். அதுவே உங்கள் காதலியுடன் ஒரு மணி நேரம் செலவிட்டால் அது உங்களுக்கு ஒரு நிமிடமாக தோன்றும் என்பார். அதேபோலத்தான் உங்கள் அன்பு ஏதோ நேற்று தான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதைப் போல் என்னை உணர வைக்கிறது.
நான் பணி நேரத்தை தாண்டியும் வழக்குகளை விசாரித்தது குறித்து குறிப்பிட்டீர்கள். அதற்கு காரணம் உங்களுடைய அழகான துல்லியமான வாதங்கள்தான்.
அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களை குறை சொல்லும் போக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் சந்தித்த இளம் வழக்கறிஞர்கள் அனைவருமே சிறந்தவர்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
மிக்க நன்றி” என தமிழில் கூறி தனது உரையை முடித்துக் கொண்சார் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா.