தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக பா.ஜ. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தொடர்ந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆட்கள், 3 கோடியே 98 லட்சத்து 91 ஆயிரத்து 500 ரூபாயை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பா.ஜனதா கட்சியின் தமிழ்நாடு அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.
எந்த காரணமும் தெரிவிக்காமல் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறி, சம்மனை ரத்து செய்யக்கோரி கேசவ விநாயகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானது என்பதால் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி வாதிட்டார். அப்போது, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கேசவ விநயாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இடைக்கால நிவாரணமாக இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜுன் மூன்றாம் தேதிக்கு தள்ளிவைத்தார்