தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த பள்ளிகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டவை. இந்த பள்ளிகளில் மாணவ மாணவியர் தாங்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வு எழுத வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் படித்து முடித்தால் அந்த படிப்பு, சிபிஎஸ்இ பள்ளி பாடத்திட்டத்துக்கு இணையானது என்றும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனங்கள் அறிவிப்பு செய்து பள்ளிகளை இயக்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த வகை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் படிப்புக்கு இணையான படிப்பு என்று சான்று வழங்கும்படி கேட்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கு மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தமிழக அரசு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டது.
அதில், உயர்கல்வி மன்றத்தின் கூட்டத்தின் முடிவின்படி, திறந்த நிலைப் பள்ளி நிறுவனங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதியை, தமிழ்நாடு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் திறந்தநிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தேசிய திறந்த நிலை பள்ளி மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.