ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, எம்.பி. நவாஸ்கனி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், நவாஸ் கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்குக்கு பதிலளிக்கும்படி எம்.பி. நவாஸ்கனி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.