இரட்டை பதவி உயர்வின் அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு கோரி அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை பதவி உயர்வின் அடிப்படையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு கோரி அண்ணாமலை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பதவி உயர்வுக்கு, பல்கலைக்கழக ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்றது.

உதவி பேராசிரியர் பணியில் உள்ள 83 உதவி பேராசிரியர்கள் விண்ணப்பித்தனர்.

இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வில்லை எனவும், பதவி உயர்வு வழங்க உத்தரவிட கோரியும் உதவி பேராசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோரிக்கையை பரிசீலித்த அண்ணாமலை பல்கலைகழகம், பேராசிரியர்களாக நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்து 2021ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தொடர்ந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில், பல்கலைகழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும விதிகளின்படி, தகுதி பெற்றிருந்தாலும், உதவி பேராசிரியர் பதவியிலிருந்து பேராசியருக்கான இரட்டை பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வாதிட்பப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில், பல்கலைகழக மானிய குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும விதிகள்படி, பேராசிரியர்களாக நியமிக்க மூன்றாண்டுகள் இணை பேராசிரியர்களாக பணியாற்றியிருக்க வேண்டும் என்பதால் ஒரு முறை பதவி உயர்வு மட்டுமே வழங்க பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இரட்டை பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விதிகள் ஏதும் இல்லை என்பதாலும், மனுதாரர்கள் இணை பேராசிரியர்களாக மூன்றாண்டுகள் அனுபவம் பெற்றிருப்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்பதாலும் இரட்டை பதவி உயர்வு கோர உரிமை இல்லை என தெளிவுபடுத்தி, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...