உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறி, அதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலின் மனுவை தாக்கல் செய்தார்

எதிர்காலங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்காக வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதாக கூறி, அதை தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக்கூறி ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மனு  குறித்து நான்கு வாரங்களில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, உள்துறை செயலாளர், டிஜிபி-க்கு  உத்தரவிட்டிருந்த, நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ். எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறி, அதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலின் மனுவை தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த வழிகாட்டு நெறிமுறை ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் செயல்படுத்தலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.

மேலும், இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆர்.எஸ். எஸ். அமைப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதன் பின்னர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து முடிவெடுக்கலாம் எனக் கூறி
விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...