கவுரவ விரிவுரையாளர்களில் இருந்து உதவிப் பேராசிரியர் பணிக்கு ஒதுக்கப்பட்ட, 1,146 இடங்களுக்கான தேர்வு நடவடிக்கையை, 12 வாரங்களில் முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Google News
Latest Tamil News தினமலர்
Colors
சென்னை:
கவுரவ விரிவுரையாளர்களில் இருந்து உதவிப் பேராசிரியர் பணிக்கு ஒதுக்கப்பட்ட, 1,146 இடங்களுக்கான தேர்வு நடவடிக்கையை, 12 வாரங்களில் முடிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு, 5 முதல் 19 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களை, உதவி பேராசிரியர்களாக நியமித்து, பணிவரன்முறை செய்வதற்கான உத்தரவை, 2020 மார்ச் 21ல் உயர் கல்வித்துறை பிறப்பித்தது.
அதன்படி, 1,146 கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறை செய்வது எனவும், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நியமிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.
இந்நிலையில், 2021 சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதால், நேர்முகத் தேர்வு நடக்கவில்லை. தேர்வு நடவடிக்கையும் கைவிடப்பட்டது. ஆட்சி மாறியதும், 2022 நவம்பரில் புதிய உத்தரவை அரசு பிறப்பித்தது.
உத்தரவில், 2020ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 4,000 உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கவும், ஏற்கனவே பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டது.
புதிய உத்தரவை எதிர்த்து, கவுரவ விரிவுரையாளர்கள்,சங்க செயலாளர் அருணகிரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன்,வக்கீல் மார்டின் ஜெயகுமார் ஆகியோர் ஆஜராகி, புதிய உத்தரவு பிறப்பிப்பதற்கு, ஆட்சி மாற்றம் தான் காரணம். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, நேர்முகத்தேர்வு வரும் கட்டத்தில், தேர்தல் அறிவிப்பால் தேர்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்றார்.
மனுக்களை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டு, 5 முதல் 20 ஆண்டுகள் வரை, மனுதாரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, நேர்முகத் தேர்வு கட்டத்துக்கு வந்துள்ளனர். தேர்தல் அறிவிப்பால், தேர்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தேர்வு நடவடிக்கை துவங்கிய பின், தேர்வு விதிகளில் மாற்றம் செய்ய முடியாது.
எனவே, 2020 மார்ச் 21ல் பிறப்பித்த உத்தரவின்படி, 1,146 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடவடிக்கையை தொடர வேண்டும். ஏற்கனவே துவங்கப்பட்ட தேர்வு நடவடிக்கையின் அடிப்படையில், 12 வாரங்களில் முடிக்க வேண்டும்.
கவுரவ விரிவுரையாளர்களில் இருந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 1,146 பணியிடங்களை, புதிய அரசாணையில் சேர்க்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...