குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானதுssj nskj

குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் பாரதி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். அதன் அடிப்படையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்குமார் என்பவர் கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது. இதனால் தனக்கு அரசு செலவில் பாதுகாப்பு வழங்கக் கோரி ஸ்டாலின் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ராஜ்குமார் கொலை வழக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாலும், குற்றப் பதிவேடு குற்றவாளியான அவர் குண்டர் சட்டத்திலும் சிறையிலடைக்கப்பட்டதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்ததாக அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்கள் பிரச்னைகளுக்காக பலர் உயிரிழந்துள்ளனர்… ஊழல், சமூக விரோத செயல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்… மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளனர்… இதுபோன்ற சூழ்நிலைகளில் அச்சுறுத்தல்களின் அடிப்படையில் அரசு செலவில் பாதுகாப்பு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குற்ற நடவடிக்கைகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு, அச்சுறுத்தல்களின் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஸ்டாலின் பாரதியின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...