கைதிகளை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதிகளை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாக அவரை தாக்கியதாகவும் கூறி, அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறையில் உள்ள சிவக்குமாரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி வேலூர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில், கைதிகளை சட்டவிரோதமாக சிறைத்துறை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டி இருந்தது.
அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்க வேண்டுமென சிபிசிஐடி தெரிவித்த நீதிபதிகள், தாக்குதலுக்குள்ளான கைதி சிவகுமாரை சேலம் சிறைக்கு மாற்றவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.