சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், svnj bench

சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே நிகர்நிலை பல்கலைகழகங்கள் செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கல்விக்கும், தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிரமான கழகத்தில் டிப்ளமோ முடித்து இளநிலை பொறியாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், தாங்கள் பி.இ. மெக்கானிக்கல் முடித்துவிட்டதால், உதவி பொறியாளர் பணியிடம் காலியாகும்போது அப்பணிக்கு தங்களை நியமிக்க வேண்டுமென டான்ஜெட்கோவிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், சேலம் விநாயக மிஷன் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் பெற்ற பி.இ, பட்டம் செல்லுபடியாகுமா என மதிப்பீடு செய்ய வேண்டியிருந்ததாக கூறி, டான்ஜெட்கோ முடிவெடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்றவர்கள், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதால் தங்களுக்கு உதவிப் பொறியாளர் பணி வழங்கக் கோரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாகும்போது தொலைதூர கல்வியில் முடித்தவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து இளநிலை பொறியாளர்களாக உள்ள ஆனந்த்குமார் உள்ளிட்ட 14 பொறியாளர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், நேரடியாக பொறியியல் படிப்பை முடித்து டான்ஜெட்கோவில் வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும், தனி நீதிபதி உத்தரவுப்படி தொலைதூர கல்வியில் முடித்தவர்களுக்கு வேலை வழங்கினால், தங்களது பணி மூப்பு பாதிக்கப்படுவதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2009ம் ஆண்டிற்குள் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஆனால் 2018ஆம் ஆண்டில் இத்தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை பொறியாளர்களுக்கு, உதவிப் பொறியாளர் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கனவே விநாயகா மிஷன் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைகழகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நிகர்நிலை பல்கலைகழகங்கள் சான்றிதழ்கள் வழங்கி, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே செயல்படுவதாகவும், கல்விக்கும் தகுதிக்கும் உள்ள வித்தியாசத்தை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உணர வேண்டுமெனவும் தங்கள் தீர்ப்பில் அறிவுத்தி உள்ளனர்.

You may also like...