தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் வகையில் இயற்றப்பட்ட புதிய விதியை எதிர்த்த மனுவிற்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமார் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பழனியப்பன் தாக்கல் பொது நல மனுவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் 2023 திருத்தங்களை அரசு கொண்டு வந்து கடந்த ஜனவரி மாதம் அதனை அமல்படுத்தியது. அதில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் அங்கீகாரம் என்பது நிரந்தரமாக இல்லாமல் குறிப்பிட்ட கால வரம்பிற்கு மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தனியார் பள்ளிகள் சட்டத்தில் இல்லாததை விதிகளில் அரசு கொண்டுவந்துள்ளது. அங்கீகாரம் என்றால் அது நிரந்தரமானது தான் தற்காலிகமானது அல்ல. தனியார் பள்ளிகள் முறையாக செயல்படுவதை கண்காணிக்கவும் செயல்படாமல் இருப்பதை தடுப்பதற்கும் புதிய விதியை கொண்டு வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தாலும் தவறு செய்யும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறுவதற்கு ஏற்கனவே உள்ள சட்டத்தில் இடம் உள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அரசாணையில் நிரந்தர அங்கீகாரம் வழங்குவது மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அரசாணைப்படி இதுவரை நிரந்தர அங்கீகாரம் வழங்காமல் தற்காலிக அதிகாரம் மட்டுமே அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் அந்த அரசாணை தொடர்பான வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் முற்றிலும் சட்டவிரோதமானது தன்னிச்சையானது மேலும் புதிய விதிகளின்படி தனியார் பள்ளிகள். தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கு அரசு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி, மற்றும் பல்வேறு நிபந்தனை விதித்துள்ளது. இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசின் இந்த புதிய விதியை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்த தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை நான்கு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை தள்ளிவைத்தனர்.