நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் ஒபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், வழக்கறிஞர் P. ராஜலட்சுமி ஆகியோர் முறையீடு செய்தனர்.

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதாலும், அதற்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஒபிஎஸ் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஒபிஎஸ் தரப்பில் பதில் மனு தககல் செய்ய தொடர்ந்து 3வது முறையாக அவகாசம் கேட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொது செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இதுவரை இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என என்பதால், இபிஎஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கு குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஒபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் ஒபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், வழக்கறிஞர் P. ராஜலட்சுமி ஆகியோர் முறையீடு செய்தனர்.

அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டிற்கான மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால், நாளை மறுதினம் (நவம்பர் 10) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

You may also like...