நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது. யானை குட்டிகள் வழக்கு

தாய் யானையை பிரியும் குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், சமீப காலமாக தாய் யானையை குட்டிகள் பிரியும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த குட்டிகளை வேறு யானைக் கூட்டத்துடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சிக்கின்றனர். அந்த குட்டியானைகளை மற்றொரு கூட்டம் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு 5 சதவீதம் மட்டுமே உள்ளதாக மறைந்த யானைகள் நிபுணர் அஜய் தேசாய் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதனால் தாயைப் பிரியும் குட்டி யானைகளை வேறு ஒரு யானைக் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு பதில், நான்கு அல்லது ஐந்து குட்டியானைகளைச் சேர்த்து ஒன்றாக வளர்த்து பின் வனத்தில் விட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அதேபோல, வால்பாறை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குட்டி, சுயமாக வேட்டையாடும் வகையில் தேவையான அளவில் நிலத்தில் வளர்த்து வனத்தில் விட வேண்டும் எனவும், வன விலங்குகளுக்கு சிகிச்சை வழங்கவும், மறுவாழ்வு வழங்கவும் சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நவீன மருத்துவ வசதியை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

மேலும், தமிழகத்தில் யானைகள் வழித்தடம் என அறிவிக்கப்பட்டுள்ள 38 வழித்தடங்கள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேணடும் எனவும், கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கவும், தமிழ்நாடு தொழில்நுட்ப நகர கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் முரளிதரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கும் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

……………..

You may also like...