நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டது.

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கடந்த 4ம் தேதி யூ டியூபர் சவுக்கு சங்கர், கோவை போலீசாரால் தேனியில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு ஊர்களின் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வைத்திருந்ததாகவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும் சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டது.

You may also like...