நீதிபதிகள் மகதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர், 164 ஆண்டுகள் பழமையான சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பித்தவருடைய தகுதியை சரிபார்க்க தவறியது பல்கலைகழகத்தின் அக்கறையின்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல் முனைவர் படிப்பிற்கு சேர்த்ததே நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உரிய கல்வி தகுதியில்லாமல் முனைவர் பட்டம் பெற்றது குறித்து புகாரை 4 வாரங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை பல்கலைகழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஆர்.தண்டபாணி என்பவர் சென்னை பல்கலைகழகத்தில் “திருவாசக பக்தி கோட்பாடு” என்கிற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பிற்காக சேர்ந்தார். அவருடைய கண்காணிப்பாளராக லோகநாத நாராயணசாமி அரசு கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் எஸ்.முருகேசன் என்பவர் நியமிக்கப்பட்டார்.
பி.ஹெச்.டி. படிப்பை முடித்து முனைவர் பட்டம் பெற்ற நிலையில் தண்டபாணியின் உரிய பூர்த்தி செய்யவில்லை என கூறி, முனைவர் பட்டத்தை திரும்பப்பெறும்படி சென்னை பல்கலைகழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் உதவி பேராசிரியர் முருகேசன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து முருகேசன் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர், 164 ஆண்டுகள் பழமையான சென்னை பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பித்தவருடைய தகுதியை சரிபார்க்க தவறியது பல்கலைகழகத்தின் அக்கறையின்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். தண்டபாணியின் தகுதியை ஆய்வு செய்யாமல் முனைவர் படிப்பிற்கு சேர்த்ததே நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முனைவர் பட்டம் என்பது உச்சபட்ச கல்விதகுதியாக கருதப்படும் நிலையில், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மெத்தனப்போக்குடன் இருக்கக்கூடாது என எச்சரித்துள்ளதுடன், கடின உழைப்பால் பட்டம் பெறக்கூடிய முனைவர்களை சந்தேகிக்கும் வகையில் பல்கலைகழகங்கள் செயல்படுவதை சகித்துக் கொள்ளமுடியாது என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதனால் இந்த வழக்கில் மனுதாரர் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.