நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியயப்பராஜ், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்ததாக சேரன்குளம் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதாவுக்கு எதிரான வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து இருபது கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதா மீது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ரோஸ்லின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியயப்பராஜ், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமுதா மற்றும் அவரது கணவருக்கு ஆதரவாக செயல்படுவதாக சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு-வுக்கு எதிராக ஏற்கனவே தாங்கள் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, புதிய விசாரணை அதிகாரி யார் என்பது குறித்து டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like...