நீதிபதி சவுந்தர், தாசில்தாரர் சிவபிரகாசத்துக்கு எதிரான புகார் மீது மூன்று வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

நில அபகரிப்பாளர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அளித்த புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டல் விடுப்பதாக திருப்பத்தூர் முன்னாள் தாசில்தாரருக்கு(தற்போது வாணியம்பாடி தாசில்தார்) எதிரான புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அருகே உள்ள அதனவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிராமத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்துக்கான தனிப்பட்டாவில், கோவிந்தராஜ் என்பவரின் திருப்பத்தூர் தாசில்தாரராக இருந்த சிவபிரகாசம் சேர்த்துள்ளதாகவும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாசில்தாரருக்கு எதிராக அளித்த புகாரை விசாரித்து 12 வாரங்களில் முடிவெடுக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது எனக் கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், புகாரை திரும்பப் பெறும்படி கூலிப்படையினரை வைத்து தன்னை மிரட்டி வருவதாகவும், இதுசம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தும், தாசில்தாரர் அரசு ஊழியர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தனது புகாரை விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சவுந்தர், தாசில்தாரர் சிவபிரகாசத்துக்கு எதிரான புகார் மீது மூன்று வாரங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஜோலார்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்

You may also like...