நீதிபதி ஜெ.நிஷா பானு, விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்த முடியாது எனக் கூறி, நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

விளையாட்டு மைதானத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் இந்து சேவா சமாஜம் நடத்தும் பள்ளிக்காக கடந்த 1989ல் சுமார் ஆயிரத்து 900 சதுர மீட்டர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கியது. இந்த நிலத்திற்கான விலையில் பாதி தொககையான 22 லட்சத்து 33 ஆயிரத்து 946 ரூபாய்க்கு, இந்து சேவா சமாஜத்திற்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தத்தில், நிலத்தை பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த வேண்டும். அந்த பகுதி மக்களும் விளையாட்டு நிகழ்ச்சிக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த நிலத்தில் பள்ளியை கட்டிய சமாஜம், மீதமுள்ள 50 சதவீத இடத்தையும் தங்களுக்கு விற்பனை செய்யுமாறு வீட்டு வசதி வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. இதை ஏற்ற வாரியம், 27 லட்சத்து 36 ஆயிரத்து 369 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்த நிலையில், 6 கோடியே 10 லட்சம் ரூபாய் தந்தால் விற்பனை செய்வதாக வாரியம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி நிலத்தை விற்பனை செய்யுமாறு வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி இந்து சேவா சமாஜம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.நிஷா பானு, விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, வேறு எந்த காரியத்திற்கும் பயன்படுத்த முடியாது எனக் கூறி, நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள மக்கள் அந்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தலாம் எனவும், நிலத்திற்காக வீட்டு வசதி வாரியம் வாங்கிய தொகையை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் திரும்ப தர வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

You may also like...