புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாக புதுச்சேரி அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கடந்த 5ஆம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு கடந்த 8ஆம் தேதி பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை அக்டோபர் 21 வரை நிறுத்துவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாததால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அரசியல் பின் தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உள்ளதாகவும், இந்த ஆணையம் நியமனம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்க அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால், அதுகுறித்து விளக்கமளிக்க மனுதாரர்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

You may also like...