போக்குவரத்து கழக வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க உள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, இன்று முதல் (ஜனவரி 9) வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டிசம்பர் 19ஆம் தேதி அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கின. இந்த வேலஇ நிறுத்தத்தில் தொமுச மற்றும் ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், மூத்த வழக்கறிஞர் P.R.ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்ந்தால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கூறி, இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு, மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். வழக்கின் மனுவை அரசு தரப்பிற்கும், போக்குவரத்து கழகங்கள் மற்றும் சம்பந்தபட்ட தொழிற் சங்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...