மதுரை விக்டோரியா எட்வர்டு ஹால் சங்க முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை முறைகேடு

மதுரை விக்டோரியா எட்வர்டு ஹால் சங்க முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை முறைகேடு புகார் குறித்த விசாரணையை தொடரக் கூடாது என சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை டவுன் ஹால் என அழைக்கப்படும் விக்டோரியா எட்வர்டு ஹால் சங்கத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளதாக கூறி முன்னாள் உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சங்கத்தை நிர்வகிக்கவும், முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்கவும், மதுரை வடக்கு மாவட்ட பதிவாளர் ரவீந்திரநாத்தை நியமித்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து விக்டோரியா எட்வர்டு ஹால் கவுரவ செயலாளர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சட்டப்படி, விசாரணை நடத்த சிறப்பு அதிகாரிக்கு அதிகாரம் இல்லை எனவும், பதிவாளருக்கே அதிகாரம் உள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

விசாரணை நடத்த சிறப்பு அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தில் அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, பதிவாளர் விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்தது.

பின்னர், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நீதிபதி அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை சிறப்பு அதிகாரி எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும், சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.

You may also like...