முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். குமரகுரு வழக்கில் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கினை முடித்து வைக்க அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்*

*முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். குமரகுரு வழக்கில் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கினை முடித்து வைக்க அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்*

அ.இ.தி.மு.க. கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர். குமரகுரு 19.09.2023 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மீது அவதூறாக பரப்புரை செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் திரு.ஆர். குமரகுரு அவர்கள் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார். இம்மனுவினை விசாரித்த மாண்பைமிகு நீதியரசர் பொதுவெளியில் அவதூறாக பேசிவிட்டு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோருவது ஏற்க இயலாது எனவும் எனவே மனுதாரர் அதே இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணையிட்டார். இவ்வாணையின் படி, திரு.ஆர். குமரகுரு 09.10.2023 அன்று அதே இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி மன்னிப்பு கோரினார். மாண்பைமிகு சென்னை உயர்நீதி மன்றம் திரு.ஆர். குமரகுரு அவர்களின் மன்னிப்பினை ஏற்று அவருக்கு முன்ஜாமீன் வழங்கி இவ்வழக்கினை முடித்து வைக்க அரசுக்கு பரிந்துரை செய்தது.
இவ்வழக்கு சம்பந்தமாக, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறை படைத்தலைவர் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும் இச்சுதந்திரம் தனிமனிதனின் உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் பல தீர்ப்புரைகளில் வலியுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் பரப்புரை செய்து, பின் அதே ஊடகங்களில் மன்னிப்பு கோருவது ஏற்க இயலாத ஒன்று. ஏனெனில் அவதூறு மற்றும் வெறுப்பு பரப்புரைகளில் தனி மனிதனின் நற்பெயர் மற்றும் புகழுக்கு தீரா களங்கத்தை ஏற்படுத்துவதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பொது அமைதி மற்றும் பொது ஒழுக்கம் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாக அமைந்து விடுவதால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமே தீங்கு விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது.
எனவேதான். இது சம்பந்தமாக (2016) 7 எஸ்சிசி 221 வழக்கில் உச்ச நீதி மன்றம் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500 ன் கீழ் கூறப்பட்டுள்ள குற்ற அவதூறு பிரிவுகள் அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், உச்சநீதி மன்றம் ரிட் மனு (சிவில்) 940/2022ல் வெறுப்புணர்ச்சி வழக்குகளில் அரசே தாமாகவே முன்வந்து சட்டப்படி வழக்குகளை தொடரலாம் எனவும் அறுதியிட்டு சமீபத்தில் தீர்ப்புரை ஒன்றினை வழங்கியுள்ளது.
மேற்கூறிய சூழ்நிலையில் இவ்வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் புதுமையான தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. அதாவது சமூக ஊடகங்களில் மன்னிப்பு கோருவது ஏற்க இயலாத எனவும், எந்த பொதுக்கூட்டத்தில் அவதூறு பரப்புரை செய்தாரோ அதே இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு மன்னிப்பு கோரிய பின்புதான் முன் ஜாமீன் வழங்கி, இவ்வழக்கினை முடித்து வைக்க பரிசீலிக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
எனவே நீதிமன்ற உத்தரவின்படி இதனை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதி மன்றத்தின் பரிந்துரையை பரிசீலிக்கும் போது இனி வருங்காலங்களில் இதுபோன்று அவதூறு மற்றும் வெறுப்பு பரப்புரைகளை செய்து பின்பு மன்னிப்பு கோரி வழக்கிலிருந்து தப்பித்து விடுவார்களோ என்று எண்ணத் தேவையில்லை. அவதூறு மற்றும் வெறுப்பு பரப்புரைகளால் சட்டம் ஒழங்கு, பொது அமைதி மற்றும் பொது ஒழுக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்தால் குற்றவாளிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 04.09.2022 அன்று சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது,
“நீதித்துறையின் ஒரு தீர்ப்பு அல்ல, ஒற்றைச் சொல்லையும் மதிக்கும் அரசாக இவ்வரசு செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்“.
அதனடிப்படையிலும் நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையிலும் இவ்வழக்கினை சிறப்பு நேர்வாகக் கருதி சட்டப்படி முடித்து வைக்க தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறை படைத்தலைவர் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...