12ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது

12ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவருக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022 ம் ஆண்டு 5,413 குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த சத்தியா என்பவர், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டில் தனது பெயரையும் சேர்க்கக் கோரியிருந்தார்.

ஆனால், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியதால் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சத்தியா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் 11 ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பள்ளியில் படித்த போதும், குடும்ப சூழல் காரணமாக 12 ம் வகுப்பு தேர்வை தனித்தேர்வராக தமிழ் வழியில் எழுதியிருக்கிறார். தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழும் பெற்றிருக்கிறார் என்பதால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற அவருக்கு தகுதி உள்ளது என உத்தரவிட்டார்.

ஏற்கனவே திருப்பூரில் ஊரக வளர்ச்சித் துறை உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு நியமன உத்தரவு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...