வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் உள்ள வரகுணபாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 4,500 ஏக்கர் நிலங்கள் இருந்ததாகவும், அதில் பெருமளவில் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவில் செயல்பாட்டை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரியும், கோவிலுக்கு அரசியல் கட்சி சாராத நபரை அறங்காவலராக நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவில் ஆவணங்களின்படி, வரகுண பாண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 3, 290 ஏக்கர் நிலங்களே உள்ளதாகவும், 707 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், கோவில் நிலத்தை விற்பனை செய்த அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அதிகாரியையும் காப்பாற்ற அரசு நினைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கோவில் நில ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
………………..

You may also like...