Smsj bench /aag nelakandan / அனுமதிக்கப்படாத பதவிகளில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை, முறைப்படுத்த முடியாது

அனுமதிக்கப்படாத பதவிகளில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை, முறைப்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகாவில் உள்ள தேவிகோடு கிராம பஞ்சாயத்தில், குடிநீர் வினியோக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், சேவியர் உள்ளிட்டோரை நியமித்து கடந்த 1997 ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவர் உத்தரவு பிறப்பித்தார். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்களுக்கு பணிநிரந்தரம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம், 2017 ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது. அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், அனுமதிக்கப்பட்ட பதவிகளில் நியமிக்கப்படாததால், அவர்களுக்க பணிநிரந்தரம் வழங்க முடியாது எனவும், இவர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனுமதிக்கப்படாத பதவிகளில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை, முறைப்படுத்த முடியாது எனவும், தகுதியான விண்ணப்பதாரர்களின் அடிப்படை உரிமையை பறிக்க முடியாது எனவும் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இதுபோன்ற பின்வாசல் நியமனங்கள் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

You may also like...