street dog case acj bench order
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மெட்ரோ சோன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்தக் கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என சென்ன மாநகராட்சி, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சமீப காலங்களாக தெரு நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சென்னை கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள ‘மெட்ரோ சோன்’ என்ற மிகப்பெரிய குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இரவு பகல் பாராமல் சுற்றி திரிந்து அங்கு செல்பவர்களை விரட்டி கடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த தெரு நாய்களை அப்புறப்படுத்தக்கோரி அந்த குடியிருப்பில் வசிக்கும் ஷபீனா பாத்திமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தடுப்பூசி போடப்படாத இந்த நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி ஊழியர்கள் வந்தாலும் சமூக ஆர்வலர் என கூறி கொள்ளும் சிலர், நாய்களை கொண்டு செல்ல ஊழியர்களை தடுப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாய்களை துன்புறுத்துவதாக கூறி ப்ளு க்ராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோம் என மாநகராட்சி ஊழியர்களை அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
சென்னை மாநகராட்சி தரப்பில், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.