அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாக 88.66 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடைக்கோரி இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேந்தர் மூவீஸ் மதன் ,எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மோசடி செய்த தொகையை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாக, அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, மாணவர்களிடம் பெற்ற தொகையை பாரிவேந்தர் திரும்ப அளித்ததை அடுத்து அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரகுமாறு பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு தடைக்கோரி பாரிவேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், 88.66 கோடி ரூபாயை திரும்ப அளித்து வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளதால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சம்மனை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

இதனையடுத்து, விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை தடுக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து பாரிவேந்தரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like...