எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கு, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக செப்டம்பர் 27ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கு, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக செப்டம்பர் 27ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகபியலாது எனவும், சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...