Gjj judge விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். Kalachthra
பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதான கல்லூரியின் நடனத் துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமிகள் மற்றும் மாணவிகளுக்கு நடனம் கற்று கொடுப்பதாக கூறி மற்றொரு நடன ஆசிரியரும் தன்னிடம் தவறான முறையில் நடத்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பெயரை குறிப்பிடாமல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், நடன ஆசிரியருக்கு காவல்துறையில் செல்வாக்கு உள்ளதால் தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி அடிப்படை முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரியை நியமித்து விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.