Gp Edwin Prabagar informed court தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11ம் தேதி கூடி விவாதித்ததாகவும், அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின், மூன்று மாதங்களில் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுப்பதற்கான கொள்கை மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கக் கோரியும் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021 ம் ஆண்டு வழக்குதொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவதைத் தடுக்க கொள்கை வகுக்கும்படி, மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் வரைவு கொள்கையை மாநகராட்சி வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11ம் தேதி கூடி விவாதித்ததாகவும், அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்த பின், மூன்று மாதங்களில் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுக்கும் கொள்கையை வகுத்த பின், அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.