Isha case நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட

ஈஷா அறக்கட்டளை சார்பில் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மின் தகன மேடையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில், காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு, நீர்நிலைகள் பகுதியில் உள்ள இந்த தகன மேடையை அகற்றக் கோரி இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஈஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், தகன மேடை அமைய உள்ள பகுதிக்கு அருகில் வசிப்பதாகக் கூறியுள்ள மனுதாரர், இருட்டுப்பள்ளம் எனும் பகுதியில் வசிப்பதாகவும், மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு ெஷட் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு எவரும் வசிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எனவும், அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஈஷா தரப்பு, இவர்கள் போலி முகவரியை சமர்ப்பித்தள்ளதாகவும், மனுதாரர் கூறுவது போல சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதும் இல்லை எனவும், முறையாக அனுமதி பெற்று தகன மேடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், மின் தகனமேடை காரணமாக அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் ஆட்சேபம் கேட்காமல் தகன மேடை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

ஈஷா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மின் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும், நவீன முறையில் எல்.பி.ஜி. எரி வாயு மூலம் உடல்கள் எரியூட்டப்படுவதாகவும், அதிக உயரத்தில் புகைபோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...