Single judge order upheld by mhc division bench

ஏற்கனவே சகோதரர் அரசு பணியில் இருப்பதாக கூறி,
கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியரை, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிய போது தாய் உயிரிழந்ததால், நாகராஜன் என்பவருக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக 1986ல் நியமிக்கப்பட்ட அவர், ஏற்கனவே அதே துறையில் சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி, 22 ஆண்டுகளுக்கு பின் பணி நீக்கம் செய்து பொது சுகாதார துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது அவர் இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வழக்கை நடத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் திடீரென பணி நீக்கம் செய்தது அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, அவருக்கு சேரவேண்டிய பணிஓய்வு பலன்களை வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு உத்தரவின்படி, கருணை அடிப்படையில் ஒரு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க முடியும் எனவும், மற்றொரு உறுப்பினருக்கு வழங்க முடியாது என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு ஊழியரின் குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் அரசு வேலையில் இருந்தால், குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு, மற்றொரு உறுப்பினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும், நாகராஜன் 22 ஆண்டுகள் பணியற்றிய நிலையில், ஏற்கனவே அவரது சகோதரர் பணியாற்றி வருவதாக கூறி திடீரென பணி நீக்கம் செய்திருக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனவும், நாகராஜனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்களை அவரது வாரிசுகளுக்கு மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, அரசு மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.

You may also like...