ஆரூர்தா நிதி நிறுவனம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அதை ரத்து செய்யக் கூடாது என்பது குறித்த விளக்கத்தையும் காவல்துறை தரப்பிலும் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான் தாக்கல் செய்தார் judge order stay

ஆரூத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான
ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வட்டி தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் உள்பட 21 பேருக்கு எதிராக பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தநர்.

இந்த மோசடியில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மாநில பாஜக ஒபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ஆர்.கே.சுரேஷ்-க்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஆர். கே. சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ஆரூத்ரா மோசாடிக்கும், தனக்கும் தொடர்பில்லை எனவும் மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்ய வாய்ப்புள்ளதால், லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 10 ம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளது குறித்து பிரமாண பத்திரத்தை அவரது வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் தாக்கல் செய்தார்.

லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அதை ரத்து செய்யக் கூடாது என்பது குறித்த விளக்கத்தையும் காவல்துறை தரப்பிலும் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான் தாக்கல் செய்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்தும், டிசம்பர் 12ம் தேதி விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டுமென ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதுவரை ஆர்.கே.சுரேஷை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...