ஈஷா வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர். எஸ் காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள ஆட்கொணர்வு வழக்கில், தனது இரண்டு மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.

மேலும், தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாக தானும் தனது மனைவியும் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மகள்களை தனி அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுவதாகவும், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தான் எந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது? அப்படி செய்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என இரண்டவது மகள் மூலம் நிர்பந்திக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது மகள்கள் ஈசா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம்? அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும் என்பதால், இரு மகள்களையும் மீட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு, ஈஷா யோகா மைய நிறுவனம் ஜக்கி வாசுதேவ் தனது மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு, மற்றவர்களின் பிள்ளைகளை சன்னியாசிகளை ஆக்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ஈஷா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா மையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவல்துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா மையத்தின் சார்பில் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஈஷா வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

You may also like...