உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா?

உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டிகள் கொண்டு வரலாமா? சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் உரிமையாளர் மனு மீது 1 மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சையத் இப்ராஹிம் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து விமானத்தில் 497 கிராம் தங்கத்தை எடுத்து வந்த போது சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

பெங்களூரில் நகைகள் செய்யும் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இல்லாததால் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தங்கத்தை கொண்டு வரும் போது அதிகாரிகள் பிடித்தனர். சுங்க பொருட்கள் சட்டத்தின் படி வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கொண்டு வந்தால் மட்டுமே பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்கிறது. உள்நாட்டில் தங்கத்தை எடுத்து வர சட்டம் அனுமதி வழங்குகிறது.

மேலும், மனைவி மற்றும் தாயின் 709 கிராம் பழைய நகைகளை கொடுத்து, ஜி.எஸ்.டி செலுத்தி வாங்கிய தங்கம் என ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை
அதிகாரிகள் கேட்கவில்லை. தங்கம் விமானத்தில் கொண்டு வருவது தடை செய்யப்படவில்லை. வணிகரீதியான பயன்பாட்டுக்கும் தங்கம் எடுத்து வரவில்லை என்பதால் கைபற்றப்பட்ட தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான , கைப்பற்றபட்ட தங்கத்திற்கான அசல் ஆவணங்களை அதிகாரிகள் வழங்கவில்லை. தங்கம் கைபற்றப்பட்டால் அபராதம் மட்டுமே விதிக்க சட்டம் அனுமதித்தும் அதிகாரிகள் அதை மீறியுள்ளனர். அதனால் தங்கத்தை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மீது 1 மாதத்தில் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like...