தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் கோவிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான்

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்திருக்கிறது. இந்த விஷ்ணு கோவிலில் மே 24 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிதம்பரம் கோவிலில் பிரதான தெய்வம் நடராஜர் தான் எனவும், அதனால் பிரம்மோற்சவம் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் பல ஆண்டுகளாக கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே மாதம் பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரம்மோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983 ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு அறங்காவலர்கள் உள்ளனர். அவர்களை வழக்கில் ஏன் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர்களுக்கு தெரியாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...