கோர்ட்டுகளில் டிஜிட்டல் பயன்பாடு விரைவில் முழுமை அடையும்- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி

பதவி ஏற்றபின் மதுரை ஐகோர்ட்டுக்கு முதன்முறையாக வருகை:கோர்ட்டுகளில் டிஜிட்டல் பயன்பாடு விரைவில் முழுமை அடையும்- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி
கோர்ட்டுகளில் காகித பயன்பாடுகள் குறைக்கப்பட்டு, விரைவில் டிஜிட்டல் பயன்பாடு முழுமை அடையும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி அளித்தார்.

By – தினத்தந்திUpdate: 2023-06-22 20:50 GMT
பதவி ஏற்றபின் மதுரை ஐகோர்ட்டுக்கு முதன்முறையாக வருகை:கோர்ட்டுகளில் டிஜிட்டல் பயன்பாடு விரைவில் முழுமை அடையும்- சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உறுதி

கோர்ட்டுகளில் காகித பயன்பாடுகள் குறைக்கப்பட்டு, விரைவில் டிஜிட்டல் பயன்பாடு முழுமை அடையும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா உறுதி அளித்தார்.

தலைமை நீதிபதி வருகை

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா கடந்த மாதம் பதவி ஏற்றார். அதன் பின்பு முதல் முறையாக மதுரை ஐகோர்ட்டுக்கு நேற்று வந்தார். அவருக்கு நீதிபதிகள், அரசு வக்கீல்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், நீதிபதிகள் சுரேஷ்குமார், வேல்முருகன், சுவாமிநாதன், புகழேந்தி, சதீஷ்குமார், அப்துல்குத்தூஸ், பி.டி.ஆஷா, சரவணன், இழந்திரையன், ஸ்ரீமதி, விக்டோரியா கவுரி, ராமகிருஷ்ணன், வடமலை உள்ளிட்ட நீதிபதிகள், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார், அரசு வக்கீல்கள் ரவி, அன்புநிதி உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பேசியதாவது:-

எப்போதும் அணுகலாம்

சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக அடிப்படையாக இருந்தது மதுரை நகர்தான். தமிழகத்தில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் அடங்கிய குடும்பத்துக்கு தலைமை பொறுப்பேற்று உறுதியுடன் செயல்படுவேன். உங்களுடைய கோரிக்கைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்.

நீதித்துறையின் வளர்ச்சிக்கு வக்கீல்களின் பங்கு முக்கியமானது. கோர்ட்டு பணிகளில் முழுமையாக டிஜிட்டல் பயன்பாட்டை கொண்டு வர வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஐகோர்ட்டுகளில் டிஜிட்டல் பயன்பாட்டை படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம். இந்த பணி விரைவில் முழுமை அடையும். இதை மாவட்ட கோர்ட்டுகளிலும், தாலுகா கோர்ட்டுகளிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

மகிழ்ச்சி

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், மதுரை நகரம் பழமையானதும், பாரம்பரியம் மிக்கதும் ஆகும். கோவில் நகரம், தூங்கா நகரம் என பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதே போல் மதுரை ஐகோர்ட்டுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இங்கு வந்திருக்கும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம், என்றார்.

You may also like...