சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023 ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதிலளித்து, அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டு பதிவை அல்ல என்றும், போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜாரானர். அப்போது அவர், மத்திய குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்க்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும் என கூறினார். மேலும், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களை தங்களுக்கு வழங்கவில்லை எனவும் மேலும் இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்
இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனு தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட இரண்டு தீர்ப்புகளுக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும் விசாரணையை தள்ளி வைக்கக்கோரும் செந்தில் பாலாஜியின் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார்.